Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வானில் அதிசயத்தை நிகழ்த்தும் பறவைக்கூட்டம்

“புள்ளினங்காள்… புள்ளினங்காள் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புள்ளினங்காள்… புள்ளினங்காள் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்”

2.0 திரைப்படத்திற்கு பின்னர் பறவைகள் மீதான நேசம் உங்களுக்கு அதிகரித்திருக்கலாம். பறவைகளின் இயல்புகள் குறித்து தேடித்தேடி ஆராய்ந்திருக்கலாம்.

ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில், ஒரே திசையில் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளாமல் இசைக்கு தகுந்தவாறு நடனம் ஆடுவதைப் போன்று பறக்கும் அதிசயத்தை பார்த்திருக்கின்றீர்களா?

மூலம்: howitworksdaily.com

நாம் நாளாந்தம் பார்க்கக்கூடிய மைனாக்களின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் “ஸ்டார்லிங்” என அழைக்கப்படும் இந்தப் பறவைகள்.

இந்தப் பறவைகள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக பறப்பது ஆங்கிலத்தில் ‘மெர்மரேஷன்” என அழைக்கப்படுகின்றது. அவை பறக்கும் பொழுது அவற்றின் இறக்கைகள் அடிப்பதனால் ஏற்படும் சத்தத்திற்கு ஏற்ப இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக பறவைகள் இவ்வாறு ஒன்று சேர்ந்து பறக்கின்றன. சில சமயங்களில்  இப்பறவைக்கூட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பறவைகள் ஒன்றுகூடுகின்றன.

ஏன் இந்த ஒற்றுமை?

குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், இந்தப் பறவைகள்  ஒரே நேரத்தில் மரங்களில் இருந்து வானில் எழுகின்றன. தம்மைத் தாக்க முடியாத அளவு ஒன்று சேர்ந்து உருவெடுத்து ஒரு வடிவத்தில் பறக்க ஆரம்பிக்கின்றன. ஆயிரக்கணக்கான பறவைகளின் கூட்டத்தில் ஒரு பறவையை மாத்திரம் இலக்கு வைப்பது என்பது இலகுவானதல்ல. எனவேதான், அந்தக் கூட்டத்தில் ஒன்று சேராமல் தனித்திருக்கும் பறவைகள் எதிரிகளுக்கு இரையாகின்றன.

பறவைகள் வெறுமனே எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக மாத்திரமன்றி, இரவு நேரங்களில் தங்களை கதகதப்பாக வைத்திருப்பதற்கும் இவ்வாறு பறக்கின்றன. குளிர்காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் நெருக்கமாக பறக்கும் போது அவற்றின் உடல் சூடு அவற்றை கதகதப்பாக வைத்திருக்கின்றது.

மூலம்: patagoniaaz.com

ஐரோப்பாவில் முக்கியமாக ஐக்கிய இராச்சியத்தில் நவம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான அதிசயக் காட்சியைக் கண்டுகளிக்க முடியும். குறிப்பாக குளிர்காலத்திலேயே இந்த அதிசயம் நிகழும்.

இந்தப் பறவைகளினால் பல மைல் தூரம் வரை பறக்க முடியும். ஐரோப்பாவில் உள்ள பறவைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பறவைகளுடன் இணைந்து ஒன்றாக தங்குகின்றன. கோடை காலத்தில் இந்த அதிசயத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவை மீண்டும் ஐரோப்பாவிற்கு பறந்து சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

பறவைகளின் இந்த மாயாஜாலம் மாலை மங்கும் நேரத்தில் நடைபெறும். சூரியன் மறையும் நேரத்தில் கூட்டினை அடையும் முன்னர் இந்த நடனம் இடம்பெறும். அதற்காக ஒவ்வொரு நாளும் பறவைகள் நிகழ்த்தும் இந்த அதிசயம் நடைபெறும் என சொல்லமுடியாது. சில நாட்களில் வெறுமனே கூட்டம் கூட்டமாக பறவைகள் கூட்டை வந்தடையும்.

இதனைப் பார்ப்பதற்கு விசேடமாக எந்தக் கருவியும் வேண்டியதில்லை. வெறும் கண்களினாலேயே இந்த அற்புதத்தை கண்டுகளிக்கலாம்.

இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்கின்றது?

மனிதர்களைப் போன்று இந்தப் பறவைகளும் முன்னரே தீர்மானித்து, பல நாட்கள் பயிற்சி பெற்று அதன் பின்னர் வானில் இந்த நடனத்தை அரங்கேற்றுகின்றனவா? மனிதர்களுக்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம். பறவைகளுக்கு அல்ல.

இந்தக் கூட்டத்திற்கு எந்த ஒரு பறவையும் தலைமை தாங்கவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எந்தப் பறவை வேண்டுமானாலும் முதலில் திசையை மாற்ற ஆரம்பிக்கலாம். எந்தவொரு பறவையும் தனக்கு அருகில் உள்ள 7 பறவைகளின் அசைவுகளைப் பார்த்தே தானும் அதுபோன்று பறக்கின்றது.

தனக்கு ஆபத்து என உணரும் எந்தவொரு பறவையும் பறக்கும் திசையை மாற்றும். இது அதன் அருகிலுள்ள சிறு அளவிலான பறவைகள் மீது ஆதிக்கம் செலுத்தும். அது அதற்கு அருகிலுள்ள பறவைகளுக்கு என முழுமையான கூட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு பறவையின் மாற்றம் அந்த பறவைக் கூட்டத்தின் மொத்தத்திற்கும் சிறிது சிறிதாக மாற்றத்தை கொண்டுவருகின்றது. இதன் காரணமாகவே அவை கடலலையைப் போன்று வளைந்தும், நெளிந்தும் பறக்கின்றன.

இந்தப் பறவைகள் ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சார்ந்தவை என்றாலும் தற்போது பல நாடுகளிலும் காணப்படுகின்றன.

அண்மைக்காலங்களில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் அவை இடம்பிடித்திருக்கின்றன. மேய்ச்சல் நிலங்களின் அழிவு, பூச்சி கொல்லிப் பாவனை, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உணவு மற்றும் கூடுகள் கட்டுவதற்கு ஏற்ற பகுதிகள் அருகி வருகின்றமை இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

கைப்பேசிக்காக கட்டப்படும் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அளவுக்கதிகமான கதிரலைகள் மூலமும் பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மைக்காலமாக நிரூபணமாகியுள்ளது.

தகவல் மூலம்: Starlingsintheuk.co.uk

Related Articles