Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சேமிக்கும் பழக்கமுள்ளவரா நீங்கள்? சேமிப்பின்மூலம் வருமானமீட்ட ஐந்து வழிகள்!

“சிறுதுளி பெருவெள்ளம்” என்ற பழமொழிக்கு அமைவாக, நாம் சிறுவயது முதற்கொண்டே, பழக்கபடுத்திக்கொண்ட ஒரு விடயமே சேமிப்பாகும்.

பிள்ளைப் பராயத்தில் சில்லறைகளைச் சேமிப்பதில் தொடங்குகின்ற இப்பழக்கம் நாம் வளர்ந்து பெரியவர்களாகி தமது வருமானத்திற்கு அமைவாக செலவினங்களைக் கட்டுப்படுத்தி எமது எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிப்பதுவரை தொடர்கிறது

காலங்கள் மாறினாலும், இலங்கையராகிய நம்மவர்கள் நமது பழக்கவழக்கங்களை காலமாற்றத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதுபோலவே, தனித்து பணத்தை சேமிக்கின்ற எண்ணத்திலேயே நாம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறமே தவிர, சேமிப்பையும் ஒரு வருமான மூலமாக எப்படி மாற்றியமைத்துகொள்ளுவது என்பது தொடர்பில் பெரிதும் அக்கறையற்றவர்களாக இருக்கிறோம்.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின்படி, தனிநபர் சேமிப்பானது 2012ஆம் ஆண்டில் 27.2 % மாக இருந்த போதிலும், 2015ஆம் ஆண்டில் 22.6% மாக குறைவடைந்துள்ளது. ஆனால், இக்காலப்பகுதியில் சராசரியாக ஒரு தனிநபரின் வருமானம் மாதமொன்றுக்கு  25,900/- (2012) இலிருந்து 30,900/- (2015 ரூபாவாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், அதிகரித்த செலவினங்கள் வருடந்தோறும் கூடிச்செல்வது சேமிப்பை ஒரு குறிப்பிட்ட அளவில் தொடர்ச்சியாக பேண முடியாதநிலையை உருவாக்கியுள்ளது. இதற்க்கு மிகமுக்கிய காரணமாகவிருப்பது, பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள் மூலாதாரமாக ஒரு வருமானவழியை அல்லது மாதசம்பளத்தை மாத்திரமே நம்பியுள்ளமை ஆகும்.

ஆகவே, சிறிய மற்றும் நடுத்திர வருமானமுள்ள குடும்பங்கள் உட்பட யாவரும் ஸ்திரத்தன்மையை பேணிக்கொள்ளத்தக்கவகையில், தங்களுடைய சிறிய சேமிப்புக்களையும், எவ்வாறு வருமானம் ஈட்டக்கூடியவகையில் முதலீடு செய்யமுடியும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகிறது.

முதலீட்டு தயக்கம்

நிலையற்ற வட்டிவீதங்கள், பங்குசந்தையின் வீழ்ச்சி, கடந்தகால ஏமாற்று அனுபவங்கள், போதிய அனுபவமின்மையோடு மேற்கொண்ட புதிய முயற்சிகள் என்பன சேமிப்பை முதலீடாக மாற்றுவதில் சிக்கல் நிலைமையினை இலங்கையில் ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய சேமிப்பின் 80% சதவீதமானவை வங்கிகளில் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்களில் தங்கி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வங்கி சேமிப்புக்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை என்கிறபோதிலும், வட்டிவீதங்கள் பணவீக்கங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதாகவே உள்ளது.

எனவே, நன்கு சந்தையை அறிந்துகொண்டு வருமானங்களைத் தரக்கூடிய முதலீட்டுக்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது முதலீட்டுத் தயக்கங்களை இல்லாமல் செய்யக் கூடியதாக அமைகிறது.

படம் - realfinancepeopel-com

படம் – realfinancepeopel-com

பாதுகாப்பான முதலீடுகள்

இலங்கையில் அனைத்து பதிவுசெய்யப்பட நிதி நிறுவனங்களுமே இலங்கை மத்தியவங்கியின் பூரண கண்காணிப்பில் உள்ளதனால், பாதுகாப்பானதாகவே உள்ளது. முன்னையகால வங்கிகளின் நிதிப் பிரச்சனைகளின் பின்பு, மத்தியவங்கியின் சட்டங்கள் மேலதிகமாக கடுமையாக்கப்பட்டுள்ளதன் விளைவாக , நிதி உபகரணங்களில் (Financial Instruments) முதலீடு என்பது பாதுகாப்பான ஒன்றாகும். ஆயினும், முதலீட்டின் மூலமான வருமானத்தைப் பெறுவதில் தனியே மத்தியவங்கியின் பாதுகாப்பு மாத்திரம் போதுமான ஒன்றல்ல. சந்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் (Level of Market Risk) , மற்றும் முதலீட்டு காலமுமே (Investment Period) முதலீட்டின் வருமானத்தை தீர்மானிக்கிறது.

முதலீடுகள் - இடர் மற்றும் வருவாய்

முதலீடுகள் – இடர் மற்றும் வருவாய்

உதாரணமாக, அரச நிதி உபகரணங்கள் (Government Securities) மிகப்பாதுகாப்பானவை. நீண்ட மற்றும் குறுகியகாலத்தில் முதலீட்டை நிச்சயம் மீளப்பெறக்கூடிய உத்தரவாதத்தை அரசு வழங்கும். எனவே, இதற்கான வட்டிவீதம் குறைவானதாக இருக்கும். எனவே, தனியார் நிதி உபகரணங்கள் (Private Securities & Debts) அரச உத்திரவாதத்தை கொண்டவை அல்ல. தனியார் நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவென பொதுமக்களிடமிருந்து நிதியைப்பெறப் பயன்படுகின்ற நிதிமூலங்கள். எனவே, இவை ஒப்பீட்டளவில் அதிக வட்டிவீதத்தை மக்களுக்கு வழங்கும். காரணம், அரச உபகரணங்களுடன் ஒப்பிடும்போது, பாதுகாப்புதன்மை குறைந்தவையாக உள்ளமையே காரணமாகும்.

எனவே, முதலீட்டு வழிகளை தெரிவு செய்யும்போது, தனியே கவர்ச்சிகரமான வருமான வீதங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், முதலீட்டின் காலம் மற்றும் முதலீட்டு அபாயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலங்கையில் உள்ள முதலீட்டு முறைகள் 

Plants

இலங்கையை பொறுத்தவரையில், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளபோதிலும், இலங்கையர்களின் நடத்தை செயன்முறை என்பன சொற்ப முதலீடுகள் மேலாகவே குவிந்துள்ளது. குறிப்பாக, இலங்கையர் நாம் அதிகளவில் வங்கிகளில் மட்டுமே உயர் வட்டிவீதங்களை நம்பி, பணவைப்புக்களை செய்திருக்கின்றோம். அதையும் தாண்டி, பல்வேறு முதலீடுகளும் முதலீட்டு முறைகளும் இலங்கையில் உள்ளன.

செல்வ மேலாண்மை ( Wealth Management)

அண்மையகாலத்தில் இலங்கையில் பிரசித்தம் பெறுகின்ற இன்னுமொரு சேமிப்பு சார்ந்த முதலீட்டு முறை இதுவாகும். எதிர்காலத்தை நோக்கியதான ஒரு திட்டத்திற்கு வருமான அளவைப்பொறுத்து, சேமிப்பை நிலையாகத் தெரிவு செய்துகொண்டு சேமிக்கும் திட்டம் இதுவாகும். குறித்த சேமிப்புக்காலத்துக்கான வட்டிவீதமும் வங்கிகளை விட இம்முறையில் அதிகமாக வழங்கப்படும். கூடவே, Withholding Tax வரி சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே, சரியான கால அளவில் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும், நிலையான சேமிப்பை மாதமாதம் மேற்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும் இது மிகசரியான வழிமுறைகளில் ஒன்று.

பங்குச்சந்தை (Share Market)

பங்குப்பரிவர்த்தனை மூலமான வருமானம் ஈட்டல் முறைமை இதுவாகும். குறித்த நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குசந்தையின் சரியான சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம், இலாபப்பங்கையும் (Dividend) , மீண்டும் அதனை விற்பதன் மூலமாக மூலதன இலாபத்தையும் (Capital Gain) பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஆகும். இதனை பங்குதரகர்கள் மூலமாக செய்வதன் மூலம், எத்தகைய நிறுவனப் பங்குகளைக்கொள்வனவு செய்வது இலாபத்தைத் தரக்கூடியது என்பதனை மேலதிகமாக உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆயினும், எந்தவொரு தனிநபரும் பங்குச்சந்தையில் தனது கொடுக்கல்,வாங்கல்களுக்குத் தானே பொறுப்பாவார்கள் என்றவகையில், பங்குப் பரிவர்த்தனை தொடர்பிலான அடிப்படை அறிவினையாவது முதலீட்டாளர்கள் பெற்றிருத்தல் அவசியமாகிறது. இதற்கான வழிமுறைகளையும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையமே ஏற்பாடும் செய்து தருகிறது. இதன்மூலமாக, பங்கு கொள்வனவின்போது நிறுவனம் தொடர்பிலும், சந்தை தொடர்பிலும் எத்தகைய விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் அறிவுபூர்வமாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.

பங்கு கொடுக்கல் வாங்கல் மற்றும் பங்குச்சந்தைக்கு என நேரஒதுக்கலை மேற்கொள்ள முடியாதவர்கள் நம்பிக்கை நிதியங்களின் பங்குகள் (Unit Trust) மீது முதலீடுகளை மேற்கொள்ளலாம். நம்பிக்கை நிதியங்கள் உங்களுக்காக பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மீது முதலீட்டை மேற்கொண்டு அதன்மூலமாகக் கிடைக்கப்பெறும் வருமானத்தினை நிலையான விகிதம் மூலம் வழங்கும். இங்கும், நிலையான வருமானம் ஒன்றையும், கொள்வனவு செய்த நிதியலகை (Unit Trust Shares) விற்பனை செய்வதன் மூலமான முதலீட்டு லாபத்தையும் பெற்றுகொள்ளலாம்.

அசையா சொத்துக்கள் மீதான முதலீடுகள்

தற்காலத்தில் அசையா சொத்துக்கள் மீதான முதலீடுகள், அதிகரித்துச் செல்லும் வருமானத்தையும், எதிர்காலத்தில் மூலதன லாபத்தையும் தரக்கூடியனவாக உள்ளன. குறிப்பாக, அசையா சொத்துக்களான காணி மற்றும் கட்டிடங்கள் (Land & Buildings) மீதான சரியான முதலீடு நிலையான வருமானத்தையும், முதலீட்டு இலாபத்தையும் தரக்கூடியனவாக உள்ளன. குறிப்பாக, இன்றைய நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் தொழில்சார்துறைகளின் வளர்ச்சி காணிகள் மற்றும் கட்டிடங்கள் மீதான கேள்வியினை அதிகரித்து கொண்டே செல்கிறது.

படம் - lamudi.lk

படம் – lamudi.lk

இதற்கான முதலீடு என்பது பெருமளவில் தேவைப்படுகிறது. அத்துடன் இதன் மூலமான வாடகை வருமானங்களும் வங்கி, பங்கு சந்தை என்பவற்றுடன் ஒப்பிடும்போது அதிகளவில் உள்ளது. அதபோல, நீண்டகாலத்திலும் அசையா சொத்துக்கள் மீதான் கேள்விநிலை தொடர்ந்து இதேபோன்றதாக இருக்குமா ? என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. கேள்விநிலைக்கு (Demand) மேலான நிரம்பல் (Supply) சந்தையில் உள்ளபோது, அது வருமான மூலங்களையும் கூடவே முதலீட்டு இலாபத்தையும் பாதிக்கக்கூடும். எனவே, மிகப்பெரிய அசையா சொத்துக்கள்மீதான முதலீடுகள் என்பது மிக அவதானமாக மேற்கொள்ளப்படவேண்டியதாக அமைகிறது. கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் இத்தகைய முதலீடுகள் தொழில் ஒன்றின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற வருமானத்துக்குச் சமமானதாக உள்ளபோதிலும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் எட்டப்படாத வளர்ச்சி, அத்தகைய பிரதேசங்களில் இதற்கான வருமானநிலையை கேள்விநிலைக்கே உட்படுத்துகிறது.

அசையும் சொத்துக்கள் மீதான முதலீடுகள் (Commodity Investment)

பணமாகவோ, வங்கிகளிலோ அல்லது உடனடிப் பணமாகவோ மாற்ற முடியாத சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு உரித்தான மற்றுமொரு முதலீட்டு வழிமுறை இதுவாகும். சேமிப்புக்கு ஏற்றவகையில், முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக;

தங்கம் மீதான முதலீடு – தங்கம் விலைகுறைவான காலத்தில் கொள்வனவு செய்து, விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்கின்ற எளிய முறைமை இது.

மோட்டார் வாகனம் மீதான முதலீடு – இலங்கையின் அதிகரித்து செல்லும் மோட்டார் வாகன வரி மற்றும் கேள்வி நிலை என்பன இந்த சந்தையை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும், இரெண்டாம் சந்தையை கொண்ட மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது, முதலீட்டு லாபத்தை பெறக்கூடியதாக அமையும்.

புதுவணிகங்கள் மீதான முதலீடு (Startup Business Investment)

அண்மையகாலத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள மிகமுக்கியமான முதலீட்டு முறைமை இதுவாகும். மிகச்சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட வணிகங்களுக்கு முதலீடுகளை மேற்கொண்டு அதன்மூலாமான வருமானத்தை பெருக்குவதுடன், முதலீட்டு இலாபத்தையும் பெற்றுக்கொள்வதாகும். இத்தகைய முதலீட்டாளர்களை “ஏஞ்சல் முதலீட்டாளர்கள்” (Angel Investors) என்றும் அழைப்பார்கள்.

ஆரம்பிக்கின்ற அனைத்து வணிகங்களுமே சமூகத்தில் வெற்றியடைவதில்லை. எனவே, வணிகங்கள்மீதான முதலீடுகள் அதிக வருமானத்தைத் தரும் அதேவேளை ஆபத்தையும் கொண்டதாக உள்ளது. குறித்த வணிகத்தின் வணிகத்திட்டம் (Business Plan) , அவர்களின் கடந்தகால வணிக நடத்தை (Business Activity) மற்றும் எதிர்கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட நிதி அறிக்கைகள் (Forecast Financial Statement) என்பவற்றைக் கவனமாக ஆய்வு செய்வதன் மூலமாக, வணிகத்தின் ஸ்திரத்தன்மையை அறிந்துகொண்டு முதலீட்டை செய்ய முடியும். இன்றைய நிலையில், இலங்கையில் நாள்தோறும் புதிய வணிக முயற்சிகள் முளைத்துக் கொண்டே இருக்கிறன. அதில், எத்தனை சதவீதமான வணிகங்கள் வெற்றி பெறுகிறன என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இப்படியான, பல்வேறு முதலீட்டுத் திட்டங்களூடாக தனியே சேமிப்பது மட்டுமின்றி, அந்த சேமிப்பின் ஊடாகவும் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதற்கு, தனியாக சுயவேலைத் திட்டங்களை திட்டமிடவோ, ஆரம்பிக்கவோ தேவையில்லை. மாறாக, முறையாக முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து, நமது சேமிப்புக்கு ஏற்ற வகையில் ஒன்றை தெரிவு செய்வதன் மூலம், சேமிப்பை அதிகரிப்பதுடன் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles