Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மரபு வழி மருத்துவம் – நவீன அறிவியல் மருத்துவம்

சமீபத்தில் யூடியூப் மூலமாக தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்க்கிறேன் என்று படித்த என்ஜினீயர் ஒருவர் செய்த விபரீதத்தால், மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்து அப்பெண் மரணமடைந்தார். நவீன மருத்துவம் மிகவும் முன்னேறி விட்ட இந்த காலத்தில் ஏன் படித்தவர்களே இத்தகைய செயலில் ஈடுபட வேண்டும்? சமீப காலங்களில் ஆங்கில முறை மருத்துவத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைய காரணம் என்ன? போன்ற கேள்விகள் விவாதத்தை எழுப்பியுள்ளன. ஒரு மருத்துவ மாணவனாக என்னுடைய பார்வையில் சில.

வீட்டுப்பிரசவமும் மூட நம்பிக்கைகளும்

பிரசவம் என்பது இயற்கையானது. வீட்டுப்பிரசவம் சிறந்தது. சரியானது. செலவு இல்லாதது. ஆங்கில முறை மருத்துவம் வியாபாரம். பணத்திற்காகவே மருத்துவமனை பிரசவத்தை திணிக்கின்றனர். சிசேரியன் செய்துவிடுகின்றனர். நம் முன்னோர்கள் என்ன சிசேரியனா செய்தார்கள்? எல்லாப் பிரசவங்களும் சுகப்பிரசவங்களாக இருக்கவில்லையா? நமது பாட்டி எல்லாம் மருத்துவமனையிலா பிள்ளை பெற்றார்கள்?அவர்கள் எல்லாம் நன்றாகப் பெற்றுக்கொள்ளவில்லையா? ஆடு, மாடெல்லாம் இயற்கையாக பிரசவிக்கவில்லையா? இத்தகைய எண்ணற்ற கேள்விகளை எழுப்பி நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான வெறுப்புணர்ச்சியை சிலர் உருவாக்குகின்றனர்.

Childbirth Pain (Pic:scarymommy)

வியாபாரமான மருத்துவம்

மருத்துவம் வியாபாரமாகிவிட்டது என்பதைத் தவிர அவர்கள் முன் வைக்கும் அனைத்து வாதங்களும் தவறானவை. நவீன அறிவியல் மருத்துவம் மட்டுமல்ல, அனைத்து மருத்துவ முறைகளும் வியாபாரமாகிவிட்டன என்ற உண்மையை அவர்கள் மறைக்கின்றனர்.

பல்வேறு நன்மைகள் இருப்பதால் உலக சுகாதார நிறுவனமே (WHO)  மருத்துவனை பிரசவத்தைத்தான் பரிந்துரைக்கிறது.

WHO Statistics about Maternal Deaths (Pic:who)

ஏன் மருத்துவமனை பிரசவத்தை நாம் ஆதரிக்க வேண்டும்?

பிரசவ நேரம் அதிகரிப்பது, பிரசவிக்க முடியாத வகையில் குழந்தை சிக்கிக்கொள்ளுவது போன்றவற்றால் கர்ப்பப்பை கிழிந்து விடுகிறது. இதனால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் (எம்.எம்.ஆர்) 38 விழுக்காட்டினர் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கால்தான் இறக்கின்றனர்.

1990 ல் (எம்.எம்.ஆர்) உயிரோடு குழந்தை பிறந்த 1 லட்சம் பிரசவங்களில் 516  தாய்மார்கள் இறந்தனர். அது 2016 ல் 130 ஆக குறைந்தது. அதற்கு முக்கியக்காரணம் மருத்துவமனை பிரசவம்.

வீட்டுப் பிரசவங்களில் தாய் – சேய் உயிர் தப்பினாலும் அவர்கள் பல மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். தாய்க்கு பிறப்பு வழியில் ஏற்படும் காயங்கள், கிழிசல்களால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்புக்கு இடையை துவாரம் ஏற்பட்டு (Vesico Vaginal Fistula) பிறப்பு உறுப்பு வழியே சிறுநீர் கசியும் நிலை ஏற்படலாம்.

Complete Perineal Tear ஏற்படுவதால், சிறுநீர்ப்பை மலக்குடல் மற்றும் பிறப்பு உறுப்புக்கு இடையே துவாரம் ஏற்பட்டு, பிறப்பு உறுப்பு (Vagina) வழியாக சிறு நீர் மலம் இரண்டும் கலந்து போதலும் ஏற்படலாம். இது போன்ற பல்வேறு நீண்டகாலப் பிரச்சனைகள் ஏற்படலாம். நவீன அறிவியல் சிகிச்சை இல்லாத, கடந்த காலத்தில் இத்தகைய தொந்தரவுகளுடன் லட்சக்கணக்கான பெண்கள், எந்த நிவாரணமும் இல்லாமல் வாழ்ந்து மடிந்துள்ளனர்.

நவீன அறிவியல் மருத்துவம் தோன்றுவதற்கு முன்பாக, பிரசவங்களில்  தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. பிரசவ நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்களால், Birth Asphyxia ஏற்பட்டு பல குழந்தைகள் மனவளர்ச்சி குன்றி வாழும் அவலநிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் பிரசவம் செய்தால் Incubator, Resuscitation போன்ற கருவிகள் உடன் பல குழந்தைகளைக் காப்பாற்றலாம்.

Most Common Postpartum Complications (Pic:rongdat)

அறியாமையால் ஏற்பட்ட கோளாறும், உயிர்பலிகளும்

தேனி அருகே ஒரு பொறியியல் பட்டதாரி தனது மனைவிக்கு வீட்டிலேயை, அவரே பிரசவம் பார்த்துள்ளார். தொப்புள் கொடியை அறுக்காமலயே விட்டு வைத்துள்ளார். தொப்புள் கொடியை அறுக்காமல் விடுவதன் மூலம் குழந்தைக்கு நோய் கிருமிகளால் நஞ்சுத்தன்மை (Septicemia) உருவாகி, இறக்கும் நிலை ஏற்படும். உரிய நேரத்தில், உரிய முறையில், கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான கருவியால் தொப்புள் கொடியை அறுக்காவிட்டால் அதன் காரணமாக தாய், சேய் இருவருக்கே பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக குழந்தைக்கு ரண ஜன்னி (Neonatal Tetanus) ஏற்பட்டு இறக்கும் நிலை உருவாகும்.

ஒரு பெண் தனது பிரசவத்தை தனக்கு விருப்பமான இடத்தில் வைத்துக்கொள்ள உரிமை இருந்தாலும், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முடிவை அவர் எடுக்க முடியாது. பிறக்க இருக்கும் குழந்தையின் உயிருக்கு பாதுகாப்பற்றத் தன்மையை உருவாக்கும் உரிமை தாய்க்கும் இல்லை, தந்தைக்கும் இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க மிக முக்கியக் காரணம், நவீன அறிவியல் மருத்துவத்தின் மீதான வெறுப்புணர்ச்சிதான்.

மருத்துவம் தனியார் மயமானதும், வணிகமயமானதும், மக்களுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளது. சிகிச்சை செலவு மிக அதிகமாகி விட்டது. இவையே இவ்வெறுப்புணர்ச்சிக்குக் காரணம்.

இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் என்பது இன்று கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் லாபகமரமான தொழிலாக மாறியுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது லாபத்திற்காக, நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.  நவீன மருத்துவம் கார்ப்பரேட் மயமாகியிருப்பது இப்பிரச்சாரத்திற்கு சாதகமாக உள்ளது.

இன்றும் பல நோயாளிகள் நாய்கடிக்கு தடுப்பூசி போட வேண்டாம். போட்டுக்கொள்ள மாட்டேன் எனக்கூறுகிறார்கள். இப்படி, தடுப்பூசி மறுத்த சிலர், RABIES எனப்படும், மருத்துவம் இல்லாத Viral Feverஆல் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர்.

Fetus Illustration (Pic:dreamstime)

தடுப்பூசிகளுக்கு எதிரான சமீபத்திய பயங்கள்

ஒரு 30 வருடங்கள் பின்னோக்கி சென்று நம் தேசத்தின் நிலையைப் பார்த்தால் ஒவ்வொரு வகுப்பறையிலும் 2 முதல் 3 குழந்தைகள் போலியோ(Polio) வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த நிலையானது இப்போது மாறி போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரிதாகியிருப்பதே நம் நவீன மருத்துவ துறை – தடுப்பூசிகளின் சாதனை என்று கொள்ளலாம்.

மேலும்,பெரியம்மை, இளம்பிள்ளை வாதம், ரணஜன்னி(Tetanus), Hepatitis B வைரஸ் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை ஒழிப்பதில் தடுப்பூசிகள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன என்பதை அறியவேண்டும்.

Polio Affected Children (Pic:hir)

மக்கள் முன்வைக்கும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்

பிரசவம் இயற்கையானது. எனவே, மருத்துவமனைக்குச் செல்லவேண்டாம் என்பது சரியா என்றால், அது சரியல்ல. ஏனெனில், பிரசவம் இயற்கையானதுதான். ஆனால், இந்த இயற்கையான நிகழ்வில் ஏராளமான சிக்கல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசிகளையும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளையும்(Iron Folic Acid), கால்சியம் மாத்திரைகளை வழங்குவதன் மூலம் பல்வேறு குறைபாடுகளையும், நோய்களையும் தடுக்க முடிகிறது. தாய்க்கு எய்ட்ஸ்(HIV- AIDS) பாதிப்பு இருந்தாலும், பிறக்கும் குழந்தைக்கு அது தொற்றிவிடாமல் தடுக்கும் திறனையும் பெற்றுள்ளோம்.

கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு உள்ள சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்யும் அளவுக்கு தொழில்நுட்பத்தை பெற்றுள்ளோம். குறை பிரசவக்குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளை கூட காப்பாற்றிவிடும் SICK NEONATAL CARE UNIT போன்ற அதிஉயர் சிகிச்சை முறைகளைப் பெற்றுள்ளோம்.

நவீன கருவிகள்,சிறப்பு மருத்துவர்கள்,புதிய மருந்துகள்,பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. எனவே,வீட்டில் பிரசவம் நடந்தால் இத்தகைய உடனடி மருத்துவ உதவிகள் தாய்க்கும் சேயிக்கும் கிட்டாது. மேலும், இப்போது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலான தாய்மார்கள் GESTATIONAL HYPERTENSION என்ற பேறுகால உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் TOXEMIA OF PREGNANCY என்ற வலிப்பு(Seizures) ஏற்படக்கூடிய நிலையும் சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. இவை கர்ப்பிணியின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

திடீரென பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிறுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக சிசேரியன்(LSCS) செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிறக்கும்பொழுது, குழந்தைகளின் கழுத்தை நச்சுக்கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்குவாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக்கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன்கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ ,மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம்.

வீட்டில் நடந்தால் காப்பாற்ற முடியாது. அதுவும் மருத்துவமே தெரியாத, பிரசவத்தையே பார்க்காத நபர்களை வைத்து பிரசவம் பார்த்தால் என்னாவது?

மனிதன் தனது தற்கால வாழ்க்கை முறையில் இயற்கையை விட்டு வெகுவாக விலகி வந்து விட்டான். எனவே, பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு என்ற பழமொழி இன்றைக்கும் பொருந்தும். தமிழகத்தில் 99.9 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

இதனால் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பச்சிளங்குழந்தைகள் மற்றும் பேறு காலத்தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைக்க உதவியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவசியமின்றி சிசேரியன் செய்யப்படுவதில்லை. எனவே, சிசேரியன் பண்ணிவிடுவார்கள் என அச்சப்படுவது அவசியமற்றது.
ஜூலியஸ் சீசர் காலத்திலேயே சிசேரியன் இருந்தது. அப்பொழுது பிரசவிக்க முடியாமல் இறக்கும் நிலைக்கு ஆளாகும் பெண்களின் வயிற்றை கிழித்து குழந்தைகளை மட்டுமே காப்பாற்றினர். தாய்கள் இறந்துவிடும் கொடுமை நிகழ்ந்தது.

இன்றைய நிலை அப்படியல்ல. தாய்-சேய் இருவரும் எளிதாக வலியின்றி, துயரின்றி, காப்பாற்றப்படுகின்றனர்.
மக்கள் அச்சப்பட காரணம் இல்லாமல் இல்லை. சில தனியார் மருத்துவமனைகள் முறைகேடான சிசேரியன்களைச் செய்கின்றன. இலாப நோக்கில் செய்யப்படும் சிசேரியன்கள் தடுக்கப்பட வேண்டும்.

Clinical Focus (Pic:sriramachandra)

மொத்த இயற்கை மருத்துவமும் தவறு அல்ல

மஞ்சள் காமாலை, பைல்ஸ், பௌத்திரம் போன்ற பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் நல்ல தீர்வுகளை கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு எந்தெந்த நோய்களுக்கு எந்த மருத்துவம் சரியானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் கடமையாற்ற வேண்டும்.

Maternal Health (Pic:unicef)

எனவே, மக்கள் பாதுகாப்பான பிரசவ முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் தொடர்பான விழிப்புணர்வைப்பெற்று, அவற்றுள் சரியானவற்றை பகுத்தறிந்து, வளமான நோயற்ற வாழ்வைப் பெற வேண்டும்.

Web Title: Traditional Medicine Vs Modern Medicine, Tamil Article

Featured Image Credit: apessay

Related Articles