Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்?

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்?

வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்?

எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக்கொண்டே நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பவரா நீங்கள்

அப்படியாயின்,

நிச்சயமாக சுயநிதி முகாமைத்துவம் பற்றியும், அதன் பயன்தொடர்பிலும், அதனை ஏன் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இன்றைய தினத்தில் பலரது குறையாகவிருப்பது, வருமானத்திற்கு மேலாக செலவீனங்கள் இருக்கிறது என்பதே ஆகும். வருமானம் இதுதான் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளுகின்ற நாம், நமது சேமிப்புகள், முதலீடுகள், செலவுகள் என்பவற்றை முறையாக முகாமைத்துவம் செய்யாமல், தனியே எனக்கான வருமானம் போதாது என்று குறை கூறிக்கொண்டிருப்பதானது அர்த்தமற்ற செயல்பாடே ஆகும்.

சுயநிதி முகாமைத்துவம் என்றால் என்ன ?

நீங்கள் உழைக்கும் பணத்தினை விட, உங்களிடம் உள்ள நிகரபெறுமதியான (Net Worth) தொகையே உங்களது சேமிப்பாக அமையும். (usnews.com)

ஒவ்வொரு தனிநபரும் தனது வருமான மூலங்களை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்திகொள்வதன் மூலமாக, எதிர்காலத்துக்கான வளங்களை உருவாக்குவதோ அல்லது வருமானங்களை முதலீடாக மாற்றி மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதையோ உறுதி செய்கின்ற முறைமையாகும்.
அப்படியாயின், எந்தந்த வழிமுறைகளின் ஊடாக அல்லது எவற்றை எல்லாம் கடைப்பிடிப்பதன் ஊடாக அல்லது எதனை அறிந்துகொள்வதன் மூலமாக சுயநிதியை வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

வருமானம் வேறு, அதில் சேமிப்பு வேறு

சுயநிதி முகாமைத்துவத்தின் மிகப்பெரும் அடிப்படையே இதுதான். நீங்கள் உழைக்கும் பணத்தினை விட, உங்களிடம் உள்ள நிகரபெறுமதியான (Net Worth) தொகையே உங்களது சேமிப்பாக அமையும். ஒருவர் அதிகமாக வருமானம் உழைப்பதால் அவரை செல்வந்தராகவும், குறைவாக வருமானம் பெறுவதனால் ஏழையாகவும் நினைத்துகொள்வது தவறாகும். அவர்களது வருமானத்தில், செலவினங்கள் எப்படி உள்ளது என்பதனை பொறுத்தே ஒருவரது நிலையை தீர்மானிக்ககூடியதாக இருக்கும்.

சேமிப்பு இல்லாமல் முதலீடு இல்லை என்பதை உணர்க

முதலீட்டு எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முதல், அந்த முதலீட்டை உருவாக்கக்கூடிய சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. இந்த சேமிப்பு தன்மையில்லாமல், எந்த முதலீட்டையும் உருவாக்கிக்கொள்ள முடியாது.

கடனட்டைக்கு அடிமையாக வாழாதீர்கள்

சாதாரணமான ஒருவர் கடனட்டை பழக்கத்திற்கு அடிமையானபின்பு, இயல்பாகவே மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. (creditcard.com)

இன்றைய நிலையில் மக்களால் வங்கிகளில் பெறப்படுகின்ற கடன்களுக்கு சமனாக, கடனட்டை மூலமான கடன்களின் அளவும் உள்ளது. சாதாரணமான ஒருவர் கடனட்டை பழக்கத்திற்கு அடிமையானபின்பு, இயல்பாகவே மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. இது சாதாரண ஒருவர் கடனை மீள செலுத்தாமல் காவிச் செல்லும் நிலையையும், பணத்தினை சேமிக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தும். எனவே, கடனட்டை பயன்பாட்டை தவிர்த்தல் மிகநன்று, அல்லது வருமானத்துக்கு ஏற்ப, மாதசெலவினத்தை அடிப்படையாக கொண்டு கடனட்டையை பயன்படுத்துவது உசிதமானது.

செலவுகள் மீது கண்டிப்புடன் இருத்தல் அவசியம்

பணத்தினை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் மாத்திரமே போதுமானது அல்ல. மாறாக, செலவின கோலத்தை கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதாரித்தனமாக செலவு செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டாலே, மாத இறுதியில் ஏற்படும் இறுக்கநிலையும் குறையும். கூடவே, சேமிப்பும் உருவாகும்.

முறைமையை கையாளுதல்

கடந்தகாலத்தில், தான் மாதம்தோறும் செலுத்தவேண்டிய கட்டணங்களையும், செலவுகளையும் குறித்துவைத்துக்கொண்டு, குறித்த தினத்தில் அதனை செலுத்துவதற்கு பரபரத்துகொண்டிருக்கும் நிலையிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலையான தொகையை வங்கிகளின் மூலமாக முன்னதாகவே முறைமைபடுத்திக்கொள்ள முடிகிறது. இது, வருமானத்தில் எவ்வளவு பணத்தினை செலவிடவேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டக் கூடியதாவும் இருக்கும்.

மிகப்பெரிய செலவுகளை அவதானமாக செய்தல்

ஆடம்பரத்துக்கும், அத்தியவசியத்திற்குமான வேறுபாடு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால், வீடு வாங்குவதிலும், போக்குவரத்து சாதனங்கள் வாங்குவதிலும் நம்மவர்கள் ஆடம்பரத்துக்கும், அத்தியவசியத்துக்குமான இடைவெளியை மறந்து விடுவார்கள். இதன் காரணமாக, மிகப்பெரிய கடனை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும், திட்டமிடாத செலவினங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றினை கையாளக்கூடிய வகையில், திரவ பணத்தினை கொண்டிருத்தல் அவசியமாகும். (zubairmarediya.com)

அதாவது, மிகப்பெரிய செலவினங்களை செய்ய தயாராகும்போது, ஆடம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிலும், அதன் அத்தியவசியத்தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப செலவுகளை மேற்கொள்ளும்போது, எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும்.

உடனடி செலவினங்களை கையாளுதல்

ஒவ்வொரு மனிதருக்கும், திட்டமிடாத செலவினங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றினை கையாளக்கூடிய வகையில், திரவ பணத்தினை கொண்டிருத்தல் அவசியமாகும். திட்டமிட்ட செலவுகள் போக, எஞ்சிய அனைத்தையுமே சேமிப்பது என்பது முட்டாள்தனமே ஆகும். காரணம், எதிர்பாராத செலவுகளுக்கு எப்போதுமே நாம் தயாராக இருத்தல் அவசியமாகிறது. எனவே, எப்போது? எவ்வளவு? சேமிப்பது என்பது தொடர்பில் அவதானமாக இருத்தல் அவசியமாகிறது.

வருடம்தோறும் பழக்கத்தினை மாற்றல்

எப்படி ஒரு கெட்ட பழக்கத்தை உடனடியாக கைவிட முடியாமல், சிறிது சிறிதாக கைவிடுவதாக முடிவு செய்கின்றோமோ அதுபோல, எந்தவொரு சேமிப்பு மற்றும் முதலீட்டையும் உடனடியாகவே மிகப்பெரிய அளவில் செய்வதென்பதும் கடினமானதாகும். எனவே, சிறிது சிறிதாக அதிலும் மாற்றத்தை கொண்டு வருதல் அவசியம். இந்த வருடத்தில் இந்தளவு தொகையை சேமிப்பதாகவோ அல்லது முதலிடுவதாகவோ முடிவு செய்திருப்பின், அடுத்துவரும் காலங்களில் அதைவிட அதிகமாக முதலீடு செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

அருகிலிருப்பவர்களுக்கும் கற்றுகொடுத்தல்

தனியாக நீங்கள் மட்டும் சுய முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக,  உங்கள் நிதியை வளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாறாக, உங்கள் அருகிலிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் இந்த பழக்கத்தை கற்றுகொடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான், மிகச்சிறந்த முறையில் நிதியைக் கையாளக்கூடியதாக அமையும்.

பொருத்தமானவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை

நம் சமூகத்தை பொறுத்தவரை, நமது சொத்துக்கள் தொடர்பிலோ,வருமானம் தொடர்பிலோ அடுத்தவருக்கு தெரிந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தை கொண்டவர்களாகவே இருக்கிறோம். இதனால்தான், பல சந்தர்ப்பங்களில் பொருத்தமான ஆலோசனைகளை பெறத்தவறிவிட்டு, வருமானம் உழைக்கும் வழிகளையும், மூலதனங்களையும் இழந்து நிற்போம். எனவே, பொருத்தமானவர்களிடம் தேவையான தகவல்களை வழங்கி ஆலோசனைகளை பெறுவதில் தவறில்லை. இது உங்கள் செல்வத்தை மேலும் பெருக்குவதாகவே அமையுமே தவிர, பாதிப்படையச் செய்யாது.

தற்போதைய நிலை என்ன என்பதனை உணர்தல்

நமது தற்போதைய நிலை என்ன? நமது சேமிப்பு மற்றும் செலவின சக்தி என்ன? பலம், பலவீனம் என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது. (cdn.lynda.com)

சுயநிதி முகாமைத்துவ செயல்பாட்டில் ஈடுபட முதலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க முதலோ, நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதனை அறிந்துகொள்வது அவசியமாகிறது. காரணம், நமது தற்போதைய நிலை என்ன என்பதனை அறியாமல் எதிர்காலத்தை திட்டமிடுவதுபோல முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. எனவே, நமது தற்போதைய நிலை என்ன? நமது சேமிப்பு மற்றும் செலவின சக்தி என்ன? பலம், பலவீனம் என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது.

வரிகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல்

கடந்தகாலங்களில் இலங்கையில் தனிநபர் வருமானம் சார்ந்த வரிகளில் இறுக்கமான நடைமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தற்போதய  அரசாங்கம் தனிநபர்களிடமிருந்து எவ்வாறு வருமானத்துக்கு ஏற்ற வரிகளை அறவிடலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் நிச்சயம் வருமான வரிகளில் இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்படப் போகின்றதென்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு தனிநபரும் தனது வருமான மூலங்களை முதலீட்டு நடைமுறைகளுக்கு பயன்படுத்தும்போது, எவ்வாறு வரி வினைத்திறன் தன்மையை கையாள முடியும் என்பதனை அறிந்திருத்தல் அவசியமாகிறது. இல்லாவிடின், தேவையற்றவகையில் வீணாக நிறைய வரியினை செலுத்துகின்ற நிலை உருவாகக்கூடும்.

மேலேகூறிய வழிமுறைகள் அனைத்துமே, தற்சமயம் உழைக்கும் வருமானத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி மேலதிகமாக எதிர்காலத்தில் எத்தகைய நலன்களை பெறலாம் என்பதனையே தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலமாக, உழைக்கும் வருமானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி மேலதிக பணத்தினை உழைக்க கூடியதாக இருக்கும்.உண்மையில், ஒவ்வரு தனிநபருக்குமே இயலுமை காலம் என்கிற ஒன்று கட்டாயமாக இருக்கும். அதற்குள் முடிந்தவரை உழைத்துவிட வேண்டும் எனவும், தனக்கும் எதிர்கால சந்ததிக்கும் தேவையானவற்றை சேர்த்துவிட வேண்டும் என்கிற சுமையும் நிச்சயமாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருமே தமக்கான சுயநிதி முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றும் போதுதான், மனதிலே ஓய்வுகால பயம் என்பதனை தாண்டிய, நிதி சுதந்திரம் கண்டிப்பாக இருக்கும்.

Related Articles